இந்தியாவை வல்லரசாக உருவாக்க வேண்டுமானால் வளர்ச்சி என்பது ஒவ்வொரு மாநிலத்திலும் பரவலாக இருக்க வேண்டும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய நிர்வாகவியல் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ உலகம் உருண்டை என்பதையும் அதன் சுழற்சி குறித்தும் ஜெர்மனியின் வானியல் நிபுணர் காப்பர்னிகஸ் கண்டுபிடிப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆர்யபட்டா உறுதி செய்துவிட்டார்.
இதுபோல கணிதம், இயற்பியல், வேதியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெளிநாட்டு நிபுணர்களின் கண்டுபிடிப்புக்கு முன்பே நாம் பல சாதனைகளை நிகழ்த்திவிட்டோம். நம் வரலாற்று பெருமைகளை இளையதலைமுறை அறியவேண்டும்.
அதற்கு நவீன கல்விமுறை தடையாக இருந்துவிட கூடாது. எந்த சவாலான சூழ்நிலைகளையும் தங்கள் கண்டுபிடிப்பு புதுமை மற்றும் யோசனைகளின் துணையுடன் புதிய வாய்ப்பாக உருவாக்க கூடிய திறமை உடையவர்கள் நம் இளைஞர்கள்.
புதிய இந்தியாவை உருவாக்க இளைய தலைமுறையினரை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். நம் நாட்டை வல்லரசாக உருவாக்க வேண்டுமானால் வளர்ச்சி என்பது அனைத்து மாநிலங்களிலும் பரவலாக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.