இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக்கியுள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
தாம் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் நிதி அமைச்சின் செயலாளரிடம் நேற்று மாலை பதவி விலகல் கடிதத்தைக் கையளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவைக் கலைத்துவிடவும் அதன் செயற்பாடுகளை இலங்கை மின்சார சபை மற்றும் நுகர்வோர் அதிகார சபை ஆகியவற்றுடன் இணைக்கவும் அண்மையில் ஜனாதிபதியின் செயலாளர் திறைசேரியின் செயலாளருக்கு அறிவித்தல் விடுத்திருந்தார்.
இதற்கமையவே இந்த பதவி விலகல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
எனினும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவைக் கலைக்க வேண்டாம் என்று ஆளும் கட்சியின் அமைச்சரான வாசுதேவ நாணயக்கார கோரிக்கை விடுத்திருக்கிறார்.
பிரதம மந்திரி மகிந்த ராஜபக்சவின் கீழ் இயங்கும் இந்த பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவை ஜனாதிபதியின் செயலகம் கலைப்பதற்கு எவ்வித அதிகாரங்களும் இல்லை என்றும் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியிருக்கிறார்.