கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் கொரோனா பரவல் எதிர்வரும் காலங்களில் குறைவடையலாம் என தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த அந்தப் பிரிவின் பிரதான வைத்தியர் சுதத் சமரவீர, தற்போது மேற்கொள்ளப்படுகின்ற பரிசோதனைகளின் அடிப்படையில், கொரோனா வைரஸை பரப்புகின்ற நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்திருக்கின்றமையை அவதானிக்க முடிகிறது என குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் நோயாளர்களுக்கு மேற்கொள்ளப்படுகின்ற பி.சி.ஆர்.பரிசோதனைகளில், அவர்களது மாதிரிகளில் கொரோனா வைரஸின் செறிமானம் குறைவாக உள்ளமையும் தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்மூலம் எதிர்காலத்தில் கொழும்பு மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்