வடமராட்சி தெற்கு- மேற்கு (கரவெட்டி) பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 2 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
31 உறுப்பினர்களைக் கொண்ட வடமராட்சி தெற்கு- மேற்கு பிரதேச சபை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்டது.
இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் 10 மணிக்கு சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரனால் சபையில் முன்வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பில், வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 16 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக 14 வாக்குகள் கிடைத்தன.
அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும் ஈ.பி.டி.பி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா 3 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்களும் என 16 உறுப்பினர்கள் ஆதரவு அளித்திருந்தனர்.
எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 7 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸுன் 7 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் சபைக்கு சமூகமளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.