வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் அதிதீவிர புயலாக உருவெடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை நோக்கி நகர்ந்து வருகிறது.
இன்று (புதன்கிழமை) இரவு கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நிவர் புயலின் தாக்கத்தால் பெங்களூரில் வெள்ளம் ஏற்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று காலை முதலே தெற்கு உட்புற கர்நாடகா மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், பெங்களூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இன்றும், நாளையும் கன மழை அல்லது மிகக் கனமழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கோலார், சிக்கபல்லபுரா, ராம்நகரா, துமகுரு, மாண்டியா, சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த மூன்று நாட்களுக்கு பெங்களூரில் பலத்த காற்று, இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் எனவும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது